6 மாவட்டங்களில் கேஸ் மானிய திட்டம்: ஆதார் எண் முக்கியமா?
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில் கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் பலருக்கு இதுவரை ஆதார் எண் தெரியாததால் அவர்கள் திண்டாடி வருகின்றனர்.
சமையல் எரிவாயுக்கான மானிய தொகையை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 184 மாவட்டங்களில் 100 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியம் பெற ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டதால் தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் பல மாவட்டங்களில் அதற்கான பணிகள் கூட நடக்கவில்லை. இன்னும் சில மாவட்டங்களில் அதற்கான பணிகள் பாதியளவு தான் நடந்துள்ளது. பல மாவட்டங்களில் புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கவில்லை. இதனால் கேஸ் மானியம் பெற ஆதார் எண் அவசியமா என்று உச்ச நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மானியம் பெற ஆதார் எண் அவசியம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆதார் அட்டை பெற மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த காலத்திற்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் அந்த கேஸ் இணைப்புக்கு மானியம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications