20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்... திட்டமிட்ட என்கவுண்டரா? - திடுக் சந்தேகங்கள்
சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்து, நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 20 தமிழக தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
செம்மரங்களை கடத்த முயன்றவர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், தற்காப்புக்காகவே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீஸ் விளக்கமளித்துள்ளது.
ஆனால், சம்பவம் நடந்த இடம் மற்றும் பலியானவர்களின் உடல்களைப் பார்க்கும் போது, இச்சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 20 தமிழர்களும் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
இந்த சந்தேகம் எழுவதற்கான காரணங்களாவன:-
- ஸ்ரீவாரிமெட்டு சேஷாசலம் வனப்பகுதியில் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 9 உடல்கள், ஒரு இடத்திலும், அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் மற்ற 11 உடல்களும் கிடந்தன உயிரிழந்த 20 பேரின் உடல்களும் ஒரேவிதமாக மல்லாந்த நிலையில் இருந்தது ஏன்? அவர்கள் துடிதுடித்து இறந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை.
- சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் உடல் அருகே தலா ஒரு செம்மர கட்டைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மரக்கட்டைகள் நேற்று வெட்டிய புதிய கட்டைகள் அல்ல. அவை 20 நாட்களுக்கு முன் வெட்டி, அடையாளக் குறியிட்டு, குடோனில் போட்டு எடுத்து வரப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
- சம்பவம் நடந்ததாக கூறப்படுகிற இடத்தில், வெட்டி கடத்துகிற வகையில், பெரிய செம்மரங்கள் இல்லை. குறிப்பாக 5 கி.மீ. தூரம் வரை செம்மரங்களே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
- சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் உடல் பகுதியில் அவர்கள் தனிப்படையினரால் பிடித்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளாக அவர்களது தோள், மார்பு பகுதிகளில் காயங்கள் காணப்படுவது அம்பலமாகி உள்ளது.
- பலியானவர்கள் அனைவரும் மேல் சட்டை இன்றி வெறும் டவுசர் போன்ற உடையுடன் மட்டுமே கிடக்கின்றனர். மேலும், அவர்களது அருகில் செருப்புகள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால், அவர்களது செருப்பு வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடக்க வேண்டும்.
- இதேபோல், பலியானவர்கள் அனைவருக்கும் வயிறு மற்றும் நெற்றியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- செம்மரக் கடத்தல்காரர்களை தேடி தனிப்படையினர் நடத்திய வேட்டையின்போது, ஏராளமானவர்கள் சிக்கியதாகவும், அவர்களில் தமிழர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, நள்ளிரவில் சுடப்பட்டு, உடல்கள் வனப்பகுதியில் கொண்டு போய் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- உடல் கிடந்த இடங்கள் ஒற்றையடி பாதையாக இருக்கின்றன. 200 பேர் கூட்டமாக போகக்கூடிய சூழல் இல்லை. 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், மற்ற 180 பேர் எங்கே போனார்கள்?