"டிஸ்மிஸ்".. கொள்கையைத் தளர்த்தி திமுக வீசிய அதிரடி குண்டு!
சென்னை: ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கக் கூடாது. அப்படி கலைக்குமாறு நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். இது திமுக முன்பு எடுத்து அறிவித்த கொள்கை முடிவு. இன்று அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளது திமுக. எடப்பாடி அரசுக்கு எதிராக டிஸ்மிஸ் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது திமுக.
திமுக என்று கூறுவதை விட திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். இது திமுகவினருக்கே கூட ஆச்சரியம்தான். காரணம், இதுகாலம் வரை டிஸ்மிஸ் தொடர்பாக திமுக கடைப்பிடித்து வந்த கொள்கை முடிவு.

இதற்குக் காரணம், மத்திய அரசின் எதேச்சதிகரமான டிஸ்மிஸ் நடவடிக்கையால் தனது அரசு பாதிக்கப்பட்டதுதான். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், 1989ம் ஆண்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்று திமுக ஆட்சியமைத்திருந்தது. ஆனால் 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர், அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி திமுக அரசைக் கலைத்தார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது திமுக எடுத்த முடிவுதான் - ஒருபோதும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய அரசு கலைக்கக் கூடாது, கலைக்கவும் நாம் கோரக் கூடாது என்பது.
இன்று அந்த முடிவிலிருந்து விலகியுள்ளார் மு.க.ஸ்டாலின். எடப்பாடி அரசு முதலில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். அதன் பின்னர் இந்த அரசை ஆளுநர் கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் அதிரடியாக கூறியுள்ளார். இது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி அரசுக்கு எதிராக இதுவரை திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளிலேயே இதுதான் மிகத் தீவிரமான முடிவு என்று கருதப்படுகிறது. இந்த நோக்கம் நிறைவேற அது அடுத்தடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளளது.












Click it and Unblock the Notifications