குடும்பத்தினருக்கு பதவிகேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது யார்? திமுகவை விளாசிய எடப்பாடியார்!
தனது குடும்பத்தினருக்கு பதவி கேட்டு மத்திய அரசுக்க கடிதம் எழுதியது திமுகதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்
சேலம்: தனது குடும்பத்தினருக்கு பதவி கேட்டு மத்திய அரசுக்க கடிதம் எழுதியது திமுகதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதியற்ற சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர் எம்ஜிஆர் என்றார். எம்ஜிஆர் அனைவரையும் சமமாக மதித்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

எம்ஜிஆர், ஜெ.வுக்கு மணி மண்டபம்
எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் முற்போக்கு சிந்தனைகளை புகுத்தியவர் என்று கூறிய அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார். சேலம் ஜெயலலிதாவின் கோட்டை என்றும் இங்கு யாரும் நுழைய முடியாது என்றும் கூறினார்.

தனது பேச்சை கேட்கின்றனர்
மேலும் தான் கூறும் கதைகளை யார் விமர்சித்தாலும் கதை சொல்வதை நிறுத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார். தான் கூறும் கதைகளை விமர்சிப்பவர்கள் தனது பேச்சை முழுமையாக கேட்கின்றனர் என்பதை அறிவதாகவும் அவர் கூறினார்.

இணக்கமாக இருப்பது குற்றமா?
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்து விளக்கமளித்த எடப்பாடியார், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குற்றமா? என கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசை விமர்சித்தவர்கள்
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்கள் நலதிட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதாகவும் அவர் கூறினார். மேலும் தனது குடும்பத்தினருக்கு பதவிக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவர்கள் யார்? பதவி கிடைக்கவில்லை என மத்திய அரசை விமர்சித்தவர்கள் யார் என்பதையும் மக்கள் அறிவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தண்ணீர் பெற்று தராதது ஏன்?
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக மக்கள் நலனுக்காக என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்தியில் அங்கம் வகித்த போது காவிரியில் தண்ணீர் பெற்று தராதது ஏன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மைனாரிட்டி அரசாக இருந்த திமுக
திமுக ஆட்சியில் இருந்த கடுமையான மின்வெட்டை போக்கியவர் ஜெயலலிதா தான் என்றும் அவர் கூறினார். எம்எல்ஏக்களின் கணக்கு கூறும் திமுக, முந்தைய ஆட்சியில் மைனாரிட்டி அரசாக இருந்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமி சாடினார். தமிழக அரசை யாராலும் அசைக்க முடியாது என்ற அவர் சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது என்றார்












Click it and Unblock the Notifications