மின்துறையில் நடப்பதை ஊழல் என்று சொல்வதா, மெகா ஊழல் என்று சொல்வதா?: விஜயகாந்த்
சென்னை: கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து ஒரு யூனிட் மின்சாரத்தை 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக 2012ல் சட்டசபையில் அறிவித்தனர். ஆனால் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 12.50 ரூபாய்க்கு வாங்குவதை ஊழல் என்று சொல்வதா, மெகா ஊழல் என்று சொல்வதா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு சூரிய ஒளி மின் கொள்கையை வெளியிட்டபோது, 'ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2003 முதல் 2014 வரை தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 'சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து ஒரு யூனிட் மின்சாரத்தை 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக 2012ல் சட்டசபையில் அறிவித்தனர். ஆனால் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 12.50 ரூபாய்க்கு வாங்குவதை ஊழல் என்று சொல்வதா, மெகா ஊழல் என்று சொல்வதா?
மின் வாரியத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் 10 ஆண்டுகளாக மின் உற்பத்தி திட்டங்களை திட்டமிட்டு தாமதப்படுத்தி, அதை காரணமாக்கி தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியுள்ளனர். அதனால் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு மின் வாரியம் கடனில் சிக்கித் தவிக்கிறது. எனவே, முதல்வர் ஜெயலலிதா, இது குறித்த உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும், அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.