சசி குடும்பத்தில் எல்லோரும் சிக்குகிறார்கள்.. வலுவான ஆவணங்களை தேடுவதில் ஐடி அதிகாரிகள் மும்முரம்!
போலி நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தில் மிதந்த சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரும் சிக்குகிறார்கள் என்கிறது ஐடி வட்டாரங்கள்.
சென்னை: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய வருமான வரித்துறை சோதனையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சிக்குகிறார்கள்... இந்த வழக்கை வலுவாக்குவதற்கான ஆவனங்களைத் தேடுவதில் வருமான வரி அதிகாரிகள் படு மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தினரை குறித்து நாடு முழுவதும் 190 இடங்களில் ஒரே நேரத்தில் 2,000 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் தரப்பு திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.
அது பணம் பதுக்கல்
இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தமிழகத்தில் இதற்கு முன்னர் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கும் இதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தைய ரெய்டுகள் ரூபாய் நோட்டுகள் பதுக்கல் போன்ற விவகாரங்களுடன் தொடர்புடையது.
ஆபரேஷன் க்ளீன் பிளாக் மணி
ஆனால் சசிகலா குடும்பத்தின் மீதான வருமான வரித்துறை சோதனை என்பது முழுமையாக கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைதான். அதாவது போலி நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீதான ஆபரேஷன் கிளீன் ப்ளாக் மணி ஆபரேஷனின் நடவடிக்கையின் ஒரு பகுதிதான்.
விசாரணை நடத்தினோம்
முந்தைய வருமான வரி சோதனைகளில் விசாரணைகள் நடத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தோம். திரும்ப திரும்ப விசாரணை நடத்தியிருந்தோம். ஆனால் இப்போது எது எது டுபாக்கூர் நிறுவனங்கள்? யாரெல்லாம் இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள்? இந்த நிறுவனங்களின் நெட்வொர்க் என்கிற அத்தனை விவரங்களையும் கையில் வைத்துக் கொண்டு களமிறங்கியிருக்கிறோம்.
வழக்கை வலுவாக்க...
எங்கள் வசம் உள்ள ஆவணங்களை உறுதிப்படுத்துகிற கூடுதல் ஆவணங்கள்தான் இப்போது தேவை. அதாவது நாங்கள் போடப் போகும் வழக்குகளில் இருந்து இவர்கள் எளிதாக தப்பிவிடக் கூடாது என்பதற்கான வழக்கை வலிமையாக்குகிற ஆவணங்களைத்தான் தேடுகிறோம். அதனால் கருப்புப் பணத்தில் மிதந்த சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரும் வசமாக சிக்கிவிட்டனர். இவர்கள் தப்பவே முடியாது என்கின்றன.