அதிமுக பெண் வேட்பாளர் வீட்டில் சிக்கிய ரூ. 14 லட்சம்.. வாணியம்பாடியில்!
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நீலோபர் கபீல் வீட்டிலிருந்து ரூ. 14 லட்சம் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் பணத்தை அதிமுகவும், திமுகவும் வாரியிறைத்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் தேர்தல் ஆணையமும் பல்வேறு பறக்கும் படைகளை களம் இறக்கி தீவிர வாகன சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. இதில் இதுவரை ரூ. 100 கோடி அளவிலான பணம் சிக்கியுள்ளது.
தற்போது நடக்கவுள்ள ஐந்து மாநிலத் தேர்தலில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியிருப்பது தமிழகத்தில் மட்டும்தான். இந்த நிலையில் வருமான வரித்துறையும் தற்போது பல்வேறு ரெய்டுகளை நடத்தி சரமாரியாக பணத்தைக் கைப்பற்றி வருகிறது.
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் நீலோபர் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர், வாணியம்பாடி டவுன் கச்சேரி ரோட்டில் உள்ள நீலோபருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் அதே வளாகத்தில் உள்ள அவருடைய வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, நீலோபர் வீட்டில் இருந்தார். அதிகாரிகளின் சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். தகவலறிந்து அதிமுகவினர் திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் ரெய்டு நடந்தது. அதன் இறுதியில் வருமான வரித்துறையினர் ரூ. 14 லட்சத்து 8 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். அதற்கான உரிய ஆவணங்கள் அதிமுக வேட்பாளரிடம் இல்லை. இதனால் அதை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மதுரையில் அதிமுக வட்ட செயலாளர் வீட்டில் ரெய்டு
இதேபோல மதுரையில், மேற்கு மண்டல அதிமுக தலைவர் மற்றும் மதுரை மாநகராட்சி 20 வது வட்ட கழக செயலாளராக இருக்கும் ராஜபாண்டி வசித்து வரும் புதூர் பொன்மேனி 2வது தெருவில் உள்ள அவரது வீட்டில் 43 பேர் கொண்ட அதிகாரிகள் படை திரண்டு வந்து சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து பின்னர் ராஜபாண்டி கூறுகையில், எனது மகள் பவதர்ஷினிக்கு இன்று 13வது பிறந்தநாள். அதற்காக வைத்திருந்த 7,200 ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். பிறந்தநாள் செலவுக்காக இதை வைத்துள்ளேன். இதை பறிமுதல் செய்தால் எப்படி என்று கேட்டேன். இதையடுத்து அதைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அதேபோல ரூ. 75 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். அதற்கான ஆவணங்களை எடுத்துச் செல்ல முயன்றனர். அது இல்லாமல் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று கேட்டேன். அதையும் கொடுத்து விட்டனர் என்றார்.
அடடே பரவாயில்லையே!