திடுதிப்பென வருமான வரி சோதனை... தினகரனை பணிய வைக்க மிரட்டுகிறதா டெல்லி?
தினகரனை பணிய வைக்கவே டெல்லி திடீரென வருமான வரிசோதனையை ஏவிவிட்டிருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு.
சென்னை: சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுகவை சசிகலா குடும்பம் கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் தொடர்ந்து டெல்லி மும்முரமாக இருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் ஆரிய- திராவிடப் போர் என தொடக்கத்தில் முழங்கினர்.
டெல்லியுடன் சமாதானம்
இதனால் சில கட்சிகளின் ஆதரவு சசிகலா குடும்பத்துக்குக் கிடைத்தது. ஆனால் தினகரன் தலையெடுத்த பின்னர் டெல்லியுடன் சமாதானமாகப் போக முயற்சித்துப் பார்த்தார். ஆனால் டெல்லி தினகரனை ஏற்கவில்லை.
அதிரடி ரெய்டு
இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை நேற்றுதான் நிறைவடைந்து தீர்ப்பும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறுக்கீடு கூடாது
இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர் ஆகியவை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்குதான் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆகையால் தினகரன் தரப்பு மீண்டும் மீண்டும் குறுக்கீடு செய்து தடை ஏதும் பெற்றுவிடக் கூடாது என மிரட்டுவதற்காகவும் கூட இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஒன்றும் நடக்கவில்லையே
அதேநேரத்தில் தமிழகத்தில் கடந்த ஓராண்டுகாலம் வருமான நடைபெற்ற வருமான வரி சோதனைகள் மர்மமாகவே இருந்து வருகிறது. சோதனைகள் நடப்பதும் சில அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுவதும் வாடிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.