சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் இரவு வரை நடந்த ஐடி ரெய்டு!
Recommended Video
சென்னை: சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சுமார் 190 இடங்களில் இன்று ஐடி ரெய்டு நடைபெற்றது.
சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, டெல்லி, கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக்கொண்டது.
அதேபோல, வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரூ.1000 கோடி சர்ச்சை
வேளச்சேரியில் ஃபினிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளை, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
பணம் எங்கே கிடைத்தது
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், திரையரங்குகளை வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா?
அடுக்கடுக்கான கேள்விகள்
இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் குற்றத்திற்காக வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா? ஏற்கனவே பல சொத்துக்களை அவர்கள் வாங்கியதாக பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லவா? இப்போதாவது அவர்கள் தமிழக மக்களுக்கு உரிய விளக்கத்தினைத் தர வேண்டாமா? இப்படியெல்லாம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
விற்கவில்லை என்று பதில்
இந்த கேள்விகளுக்கு சசிகலா தரப்பில் பதில் வரவில்லை. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் பதில் தரவில்லை. ஆனால், விவகாரம் பெரிதாக தொடங்கிய பிறகு, திரையரங்குகளை நாங்கள் விற்பனை செய்யவில்லை என்று வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்தின் கிளாசிக் மால் டெவலப்மென்ட் நிறுவனம் விளக்கம் அளித்தது. ''ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளை ரூ.1000 கோடிக்கு சசிகலா வாங்கியதாக கூறுவது உண்மையல்ல. சென்னையில் உள்ள எங்களது 11 திரையரங்குகளை யாருக்கும் விற்கவில்லை. ஜாஸ் சினிமாஸ் வாடகை உரிமை அடிப்படையில் திரையரங்குகளை நடத்தி வருகிறது'' எனக் கூறப்பட்டிருந்தது.
ஆவணங்கள் சிக்குமா
இந்த அறிக்கைக்கு பிறகு, சர்ச்சை ஓய்ந்திருந்த சர்ச்சை ஐடி ரெய்டு மூலம் மீண்டும் வெடித்துள்ளது. இந்த ஐடி ரெய்டின்போது, சசிகலா தரப்பில் சினிமா தியேட்டர்கள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் அப்படி எதுவும் விற்பனை நடைபெறவில்லை என்ற அறிக்கை வெளியான பிறகும் கூட அங்கு ஐடி ரெய்டு நடந்தது. காலை முதல் இரவு வரை நடந்த சோதனை, இரவு சுமார் 9 மணியளவில் நிறைவடைந்தது.