சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதியா? சிபிஐ விசாரணை கோரும் ஜெ.தீபா
சென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் இதற்காக அவரிடம் இருந்து ரூ.2 கோடி வரை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார். இதனை கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி. ரூபா தீவாகர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது சிறையில் சசிகலா 5 மாத காலத்திற்குள் ஆடம்பர வாழ்விற்கு 2 கோடி லஞ்சப் பணமாக சிறை அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது. சிறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக மத்திய அரசு வழக்கம் போல் கவனகுறைவாக இல்லாமல் உடனடியாக மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியிலும் மறைமுகமாக பங்கெடுத்து சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. அம்மாவின் மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனது தலைமையிலான உண்மையான அ.தி.மு.க. மக்கள் சக்தியுடன் விரைவில் இரட்டை இலையை மீட்டு அம்மாவின் ஆட்சியை நிறுவ பாடுபடுவோம்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் தொண்டர்கள் ஆதரவுடன் மீட்போம். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைபடும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications