அதிமுக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு... பொருளாளராக அதே ஓபிஎஸ், கொபசெவாக தம்பித்துரை
சென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொருளாளராக பன்னீர்செல்வமும், அவைத்தலைவராக மதுசூதனனும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளராக வைத்திலிங்கமும், விசாலாட்சி நெடுஞ்செழியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளராகவும், தமிழ்மகன் உசேன் அனைத்துல எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும், தம்பிதுரை கொள்கைப்பரப்பு செயலாளராகவும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் பொருளாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பரவலாக தகவல் வெளியாகி வந்த நிலையில் ஒ.பன்னீர் செல்வம் மீண்டும் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் 234 தொகுதிகளையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். கூட்டணி கட்சிக்கு 7 இடங்களை ஒதுக்கி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார்.
சட்டசபை தேர்தலில் பல இடங்களில் நிர்வாகிகள் ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தால் பல இடங்களில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது. குமரி மாவட்டத்தில் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சில தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. இதனையடுத்து நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிமுக புதிய நிர்வாகிகளை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் பட்டியல்
1. ஜெயலலிதா (கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் )
2. மதுசூதன் (கழக அவைத் தலைவர்)
3. பன்னீர்செல்வம் (பொருளாளர், நிதி, ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்)
4. வைத்திலிங்கம் எம்.பி. (அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
5. எடப்பாடி பழனிசாமி (தலைமை நிலையச் செயலாளர், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்)
6. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)
7. விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்புச் செயலாளர், தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்).
8. தம்பிதுரை (கழக கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை துணை சபாநாயகர்)
9. பொள்ளாச்சி ஜெயராமன் (தேர்தல் பிரிவுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்)
10. செம்மலை, எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்)
11. துரை கோவிந்தராஜன் (விவசாயப் பிரிவுத் தலைவர்)
12. தளவாய்சுந்தரம் (அமைப்புச் செயலாளர்)
13. பா.வளர்மதி (இலக்கிய அணிச் செயலாளர்)
14. தாடி ம.ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்)
15. சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்)
16. ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்)
17. அன்வர்ராஜா எம்.பி. (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்)
18. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர் வருவாய்த் துறை அமைச்சர்)
19. மைதிலி திருநாவுக்கரசு (அமைப்புச் செயலாளர்)
20. செல்வராஜ் எம்.பி. (அமைப்புச் செயலாளர்)
21. வேணுகோபால் (மருத்துவ அணிச் செயலாளர் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்)
22. சேதுராமன் (வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்)
23. நவநீதகிருஷ்ணன் எம்.பி. (வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கழக மாநிலங்களவை குழுத் தலைவர்)
24. ராஜூ (அமைப்புச் செயலாளர்)
25. நீலாங்கரை முனுசாமி (மீனவர் பிரிவுச் செயலாளர்)
26. விஜிலா சத்தியானந்த் எம்.பி. (மகளிர் அணிச் செயலாளர்)
27. கமலகண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்)
28. குமார் எம்.பி. (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்)
29. விஜயகுமார் எம்.பி. (மாணவர் அணிச் செயலாளர்)
30. அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
31. வைரமுத்து (விவசாயப் பிரிவுச் செயலாளர் புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்)
32. கோபால் எம்.பி. (அமைப்புச் செயலாளர்)
33. வளர்மதி (அமைப்புச்செயலாளர் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை அமைச்சர்)
34. நாராயணபெருமாள் (அமைப்புச் செயலாளர்)
35. சுதா பரமசிவன் (அமைப்புச் செயலாளர்)
36. சொரத்தூர் ராஜேந்திரன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்)
37. ராமச்சந்திரன் (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்)
38. கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணைச் செயலாளர்)
கட்சியில் பொருளாளர் பதவி கிடைப்பது என்பது சாதாரண விசயமில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததுதான் பொருளாளர் பதவி. திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கணக்கு கேட்ட சர்ச்சையினால்தான் அங்கிருந்து நீக்கப்பட்டு அஇஅதிமுக உருவாக்க காரணமாக அமைந்தது. தமிழக முதல்வராகவும் ஆனார் என்பது வரலாறு.
திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த கருணாநிதி, அந்த கட்சியின் தலைவரானார். பின்னர் முதல்வரானார். அதே சென்டிமென்டில் தனது மகன் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் பதவி வழங்கினார்.
அப்படிப்பட்ட முக்கிய பதவியாக விளங்கும் பொருளாளர் பதவி, அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக மாறிவிட்டதாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் அரசியல் அஸ்தமனமாகிப் போனதுதான்.
•எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது அதிமுக பொருளாளர் பதவி தலித்துக்கு என்ற அடிப்படையில் சவுந்திரபாண்டி, துரைராஜ் போன்றோருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவரே அந்த முறையை மாற்றி பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வந்தார்.
பிறகு அமைச்சராக இருப்பவருக்கு அந்த பதவி கிடையாது என திருப்பத்தூர் மாதவனை கொண்டு வந்தார்.
•ஜெயலலிதா பொதுச் செயலாளரானதும் எம்ஜிஆர் பார்முலாவை தூக்கி எறிந்தார். கட்சியின் அவசர பொதுக்குழுவை கூட்டி பொருளாளர் பதவியை நியமன முறையில் மாற்றம் செய்தார்.
• அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இன்று அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார்.
•கடந்த 2000 முதல் 2006ம் ஆண்டு வரை அ.தி.மு.க. பொருளாளராக, ஜெயலலிதாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இருந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
• திண்டுக்கல் சீனிவாசனை ஓரம் கட்டி டிடிவி தினகரன் பொருளாளர் ஆனார். அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவிகளை அலங்கரித்தவர். இப்போது அதிகாரம் இல்லாமல் இருக்கிறார்.
• தினகரனின் பொருளாளர் பதவியை காலி செய்து விட்டு ஓ. பன்னீர் செல்வத்தை பொருளாளராக அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா சிறையில் இருந்த போது ஓ.பி.எஸ் முதல்வரானதோடு அதிமுகவின் அதிகாரமிக்க மையமாக விளங்கிய ஐவர் அணியில் முக்கியமானவராக இருந்தார் . ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.
•அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படலாம் என்றும் புதிதாக ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என்றும் பரவலாக பேசப்பட்டது. செல்லூர் ராஜூவின் பெயரும் அடிபட்டது.
• பொருளாளர் பதவி அதிர்ஸ்டமில்லாத பதவி என்று பலரும் அலறினர். அந்த பதவியில் அடுத்து அமரப்போகிறவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் பொருளாளராக மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
• அரசின் கஜானாவை பாதுகாக்க நிதி அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டது போல, கட்சியின் கஜானாவை பாதுகாக்க சரியான நபர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று முடிவு செய்து விட்டார் ஜெயலலிதா.