ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியவில்லை.. டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளதையடுத்து தமிழக அரசு சரியாக இந்தப் பிரச்சனையை கையாளவில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று திமுக செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையில் போது தென் மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக்கு தடைவிதிக்கப்பட்டதையடுத்து, தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல என்றும், ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, திமுக செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தை முறையாக சரியாக கையாளவில்லை. அதே போன்று நீதிபதிகளுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. காரணம் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு காளைகளை எந்த அளவிற்கு பேணிப் பாதுகாத்து வருகிறார்கள் என்தெல்லாம் நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. அல்லது இதனை எல்லாம் முறையாக தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
எனவே, உரிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். பாரம்பரியமான விளையாட்டு, ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்ற போஷாக்கு, மற்ற மாடுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதை என்பதை எல்லாம் தமிழக அரசு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.