உங்கள் ஓட்டு கப் அன்ட் சாசருக்கே: ம.ம.க. சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த ஜவாஹிருல்லா
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சின்னத்தை கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிமுகம் செய்து வைத்தார்.
மனிதநேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. திமுக தலைவர் கருணாநிதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கினார்.
இதில் உளுந்தூர்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்ததுடன் அதை திமுகவிற்கே வழங்கிவிட்டது. இதையடுத்து உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தை சென்னையில் உள்ள ராயுபுரத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
ராமநாதபுரத்தில் இருந்து நாளை முதல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.