அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: ஜெயலலிதா
சென்னை: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்க நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை நான் நேற்று வெளியிட்டிருந்தேன்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சில உதவிகள் வழங்க நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன்.
மின் கட்டணம்
அதன்படி, பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின்உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்தை உடனே செலுத்த வேண்டியதில்லை என நான் உத்தரவிட்டுள்ளேன்.
அவர்கள் தற்போது செலுத்தவேண்டிய மின்கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்தலாம் என நான் உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு காலதாமதமாக மின்கட்டணம் செலுத்துவதற்கு எவ்வித அபராதத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது.
தடுப்பூசிகள்
தற்போது குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முழுவீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நோயினால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கு தடுப்பூசிகள் உடனடியாக போடப்படவேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு முககவசங்கள், கையுறைகள், மழை கோட் மற்றும் ‘கம்பூட்ஸ்' ஆகியவற்றை உடனடியாக வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
பிளீச்சிங் பவுடர்
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஒரு கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும், சுகாதாரத்துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆயிரத்து 105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
காய்கறிகள்
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், எனது உத்தரவின்பேரில், 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு உருளைக்கிழங்கு கிலோ 23 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்ட போதிலும், வெளிச்சந்தையில் கிலோ 45 ரூபாய் வரை விற்பதாக தெரிய வருகிறது.
எனவே, கூடுதலாக 100 டன் உருளைகிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.
தேர்வுகள்
மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7-12-15 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்திட நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப நான் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.