சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட தமிழக பெண்ணுக்கு நியாயம் வேண்டும்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் நாடு திரும்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
மோடிக்கு, ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம், வீட்டு உரிமையாளர்களால் கை துண்டிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
எனது உத்தரவின்பேரில் இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகம், சவுதி அரேபிய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று சில நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது கஸ்தூரி உறுதியான மனநிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டில் இருந்து தப்பிஓட முயற்சிக்கும்போது தவறி விழுந்ததால்தான் கை துண்டானதாகவும் அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். இதையே சவுதி அரேபிய காவல் துறையினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஏழை கூலித் தொழிலாளியான கஸ்தூரிக்கு நீதி கிடைக்க சவுதி அரேபிய அரசை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நிலை மோசமாக உள்ள அவருக்கு நல்ல, தரமான சிகிச்சை கிடைக்கவும், பாதுகாப்பாக நாடு திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.