காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வழித்தடம் தேவை: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வழித்தடம் தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். சுமார் 1000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலத்துக்கு விற்க தமிழகம் தயாராக உள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் காற்றாலை மூலம் 7 ஆயிரத்து 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரச திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்திக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், ஆயிரம் மெகாவாட் உபரி மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழகம் விரும்புகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு இடையே பசுமை வழித்தடம் அமைக்க வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.