அப்துல் கலாம் மறைவுக்கு அதிமுக 7 நாள் துக்கம்: ஜெ. அறிவிப்பு
சென்னை: மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"இந்தியத் திருநாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவர் பதவியில், உலகம் புகழும் வகையில் பணியாற்றிய 'பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன். தமிழ் அன்னையின் பெருமை மிகு புதல்வராக விளங்கியவர் டாக்டர் அப்துல் கலாம். அன்னாரது எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும் பண்பும் உலகம் அறிந்த உயர் குணங்கள்.
டாக்டர் அப்துல் கலாம் தன்னுடைய உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் பல மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் இடம் பெற்றவர். அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications