ஜெயலலிதா வழக்கில் சந்தித்த சவால்கள், கடைசி நாள் வாதங்கள்: மனம் திறந்தார் பவானிசிங்
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் அளித்த பேட்டியில், வழக்கில் நடந்த சுவாரசியங்களை விவரித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங் முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்தார்.
இதுகுறித்து இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு தரப்பில் நான் ஆஜராக தொடங்கியபோது, என்மீது நம்பிக்கையில்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. திமுக மட்டுமின்றி, கர்நாடக அரசுக்கே என்மீது நம்பிக்கையில்லாததை போலத்தான் காணப்பட்டது.
மிகுந்த சிரமத்துடன்தான் நான் பணியாற்ற வேண்டியதாயிற்று. இருப்பினும் வழக்கில் ஆஜராக வரும்போதே, இந்த வழக்கை முடித்துவிட்டுதான் செல்வது என்ற உறுதியுடன் வந்தேன். எனவேதான் எனது மீது யாரும் நம்பிக்கைவைக்காத போதிலும், நான் வக்கீலாக தொடர்ந்தேன். கடவுள் துணையுடன் ஏற்ற பணியை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.
தீர்ப்பு சொல்லப்படும் நாளன்று, காலையில் ஜெயலலிதா உற்சாகமாகவே காணப்பட்டார். ஆனால் தீர்ப்பு வெளியான பிறகு அவரது முகம் சோகமாக காணப்பட்டது. உடல் நிலை சரியில்லை என்பதை காரணமாக கூறி, நீதிபதியின் பரிதாபத்தை சம்பாதித்து ஜெயலலிதாவுக்கு தண்டனையை குறைக்க அவர் தரப்பு வக்கீல்கள் முயன்றிருக்கலாம். ஆனால் அவர்கள் (ஜெயலலிதா சார்பிலான வக்கீல்கள்) அப்படி செய்யாமல், முதல்வர் பதவியில் உள்ளவர், இசெட் பாதுகாப்பில் உள்ளவர் என்று அவரது தகுதிகளின் அடிப்படையிலேயே தண்டனை குறைப்புக்கு வாதாடினர்.
தண்டனை குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று நீதிபதி சொன்ன பிறகே உடல் நிலையை வக்கீல்கள் காரணம் காண்பித்தனர். அப்போது நான் தலையிட்டு, உடல் நலம் சரியில்லை என்றால் கவனித்துக்கொள்ள சிறையில் மருத்துவர்கள் உள்ளனர் என்று கூறி, ஆட்சேபம் தெரிவித்தேன்.
அதேபோல சிறையில் இசெட் பிரிவு பாதுகாப்பு தொடர வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கேட்டதற்கும் நான் ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால் நீதிபதி, இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எந்த வகை பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை சிறைத்துறை முடிவு செய்துகொள்ளட்டும் என்று அறிவித்துவிட்டார்.
சிறைச்சாலையில் 'ஏ கிளாஸ்' வழங்க வேண்டும் என்ற ஜெ. தரப்பின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். முதல்வர் பதவியில் இருந்தவருக்கு ஏ கிளாஸ் வசதி தருவதில் தவறில்லை என்பதால் அக்கோரிக்கையை நான் எதிர்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா தரப்பில், சென்னை சிறைக்கு தன்னை மாற்றுமாறு நீதிமன்றத்திடம் கோர முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பவானிசிங் "சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு கர்நாடகாவில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், இவ்வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுமே கர்நாடகாவில்தான் நடந்தாக வேண்டும். எனவே ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில்தான் இருந்தாக வேண்டும். ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் கர்நாடகாவை தாண்டி வெளியே செல்ல முடியும்" என்று பவானிசிங் தெரிவித்தார்.