தீபாவுக்கு பெருகும் ஆதரவு... சேலத்தில் ஜெ.தீபா பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம்
ஜெயலலிதா தீபா பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் மாநில அளவின் முதல் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தலைமை பொறுப்பை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். சசிகலா பொறுப்பேற்றுள்ளதற்கு அதிமுக தொண்டர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

தொண்டர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகுவதால் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தீபா கூறியுள்ளார். இதனிடையே கரூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா தீபா என்ற பெயரில் பேரவை துவங்கியுள்ளனர் அதிமுகவினர்.
இந்நிலையில் ஜெயலலிதா தீபா பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம் சேலத்தில் கூடியது. இந்த கூட்டத்தில் பேரவைக்கு பச்சை கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 21 மாவட்டங்களுக்கு பேரவை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டடுள்ளனர். ஜெ.தீபா பேரவையில் இதுவரை 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்த்து பிப்ரவரி 24 ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தீபாவை சந்தித்து பேரவைக்கு தலைமை ஏற்குமாறு வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீபா பேரவை உறுப்பினர்கள் சேர்ப்பு பணி தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications