ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதில் தப்பில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதில் தவறில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான அதிமுக தொண்டர்கள் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஜெயலலிதா கர்நாடக சிறையில் இருப்பதால் அங்குள்ள போலீசாருக்கு தேவையில்லாமல் வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என தேவேகவுடா பேட்டியளித்திருந்தார்.
இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறும்போது, ‘சிறையில் ஜெயலலிதா நலமாக உள்ளார். சிறை விதி முறைகளின்படி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தமிழக சிறைக்கு இடம் மாற்றம் செய்வது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘தங்கள் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நிலையால் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். ஜனநாயக முறைப்படி அவர்கள் போராட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை. தமிழகத்தின் சீதோஷ்ண நிலையும், பெங்களூரின் சீதோஷ்ண நிலையும் முற்றிலும் மாறுபட்டது.
இதே சூழல் தொடருமேயானால் தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.