ஜெ. தாக்கப்பட்டிருக்கலாம்.. சசிகலா குடும்பத்தினரை விசாரிக்கனும்.. தீபா கோரிக்கை!
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார். இதனால் போயஸ் இல்லத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவை யாரும் சந்திக்கவில்லை. அவர் சிகிச்சைப் பெறும் போட்டோக்களும் வெளியிடப்படவில்லை.
விசாரணை ஆணைம்
இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அண்மையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கமிஷனில் தீபா ஆஜர்
இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் நேரில் விளக்கம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
ஜெ.தாக்கப்பட்டிருக்கலாம்..
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக அவர் கூறினார். ஜெயலலித வீட்டில் இருந்த ஒரு நபர் தங்களுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜெ. உதவியாளர் ராஜம்மாள்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த ராஜம்மாளை விசாரிக்க வேண்டும் என்றும் தீபா வலியுறுத்தினார். ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சசிகலாவை விசாரிக்க வேண்டும்
குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் தீபா கோரிக்கை விடுத்தார். தீபாவிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.