ஜெ.யின் வடக்கு சென்டிமெண்ட்... வாஸ்துபடி அமையும் பொதுக்கூட்ட மேடை
சென்னை: நியுமராலஜி பார்த்து ராசியான எண்கள் உள்ள நாட்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஜெயலலிதா, வாஸ்துப்படி வடக்கு பார்த்த திசையில் அமைக்கப்பட்ட மேடையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இன்று சென்னை தீவுத்திடலில் வடக்கு பார்த்த திசையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் முதல்வர் ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.சென்னையில் உள்ள 20 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவதுடன், தேர்தல் அறிக்கையும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடந்த 4ம்தேதி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அன்றே, தனது சூறாவளி பிரசார பயண திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்தார். தமிழகத்தில் 14 நாட்களும், புதுச்சேரியில் ஒரு நாளும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று முதல் தனது பிரசாரத்தை ஜெயலலிதா தொடங்குகிறார். வழக்கம் போல் இந்த முறையும் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக அதிமுக நிர்வாகிகள், அனுமதி கேட்டு தலைமை தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்திற்கான மேடைகள் அவரது ராசியின் படி வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை, அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீவுத்திடலில் பொதுக்கூட்டம்
சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் ஜெயலலிதா. இதற்காக தீவுத்திடல் மைதானத்தில் வடக்கு திசை நோக்கி பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் வசதியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளதாம்
வேட்பாளர்கள் அறிமுகம்
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்.
ஹைடெக் பிரச்சார வேன்கள்
பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசுவதை அப்படியே லைவ் ஆக ஒளிபரப்ப, செயற்கைக்கோள் வசதியுடன் டிஜிட்டல் திரை பொருத்தப்பட்ட 75 பிரசார வேன்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
நேரடி ஒளிபரப்பு
பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும் காட்சிகள், சென்னையில் உள்ள 21 தொகுதிகளிலும் பிரசார வாகனங்களில் உள்ள பிரமாண்ட திரை மூலம் மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
ஹெலிகாப்டரில் பிரச்சாரம்
சென்னை தவிர காஞ்சிபுரம், விழுப்புரம், விருத்தாசலம், வேலுார், பெருந்துறை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், தர்மபுரி, மதுரை, கோவை, நெல்லை, வேலுார், புதுச்சேரி ஆகிய இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். பிரசார மேடை அருகே ஹெலிகாப்டரில் இறங்கி அங்கிருந்து மேடைக்கு செல்கிறார்.
பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
இதற்காக ஜெயலலிதா பேசும் மேடைக்கு அருகே ஹெலிபேட் தளம் அமைக்கும்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹெலிபேட் மற்றும் பிரசார மேடைகள் தொடர்பாக, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து ஓகே சொன்ன பிறகே தேர்தல் பிரசார மேடைகள் அமைக்கும் பணியை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு வாஸ்து
பிரசார மேடைகள் வடக்கு திசையை நோக்கி இருக்கும்படி அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பிரசார இடங்களை தேர்வு செய்வதும், ஹெலிபேட் தளம் அமைக்கும் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன.
கடலூரில் பிரச்சாரம்
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், 11ம் தேதி, கடலுார், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த, 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். இதற்காக, விருத்தாசலம், சித்தலுார் புறவழிச்சாலை அருகே, பொதுக்கூட்ட மேடை மற்றும், 'ஹெலிபேட்' அமைப்பதற்காக, 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்த மேடை
இந்த இடத்தில், கணபதி பூஜையுடன், பந்தல்கால் நடப்பட்டு, பொதுக்கூட்ட மேடை கிழக்கு நோக்கி இருக்கும்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு புறத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணியும் நடந்து வந்தது.
விருத்தகிரீஸ்வரர் கோவில்
பொதுக்கூட்ட மேடை, ஹெலிபேட் இரண்டுமே, வடக்கு புறத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலை நோக்கி இருக்க வேண்டும் என, அதிமுக மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து புதிதாக வாஸ்துபடி மேடைகளை அமைத்து வருகின்றனர்.
227 தொகுதி வேட்பாளர்களும் பிரச்சாரம்
அதிமுக போட்டியிடும் 227 தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று காலை 10.30 மணிக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்கள். காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தேர்தல் பணிமனைகள் திறக்கப்படுகின்றன.
லோக்சபா தேர்தலில் வடக்கு
கடந்த லோக்சபா தேர்தலின் போது டெல்லி வடக்கே இருப்பதால் வடக்குப் பக்கமாக பிரசாரம் கிளம்புவது, வடக்கே பார்த்த கோயிலில் வழிபடுவது என வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபைத் தேர்தலிலும் வடக்கு வாஸ்துவை பின்பற்றுகிறார் ஜெயலலிதா. ராசியான தீவுத்திடலில் வடக்கு பார்த்த திசையில் அமைக்கப்பட்ட மேடையில் பேசுகிறார் ஜெயலலிதா. இம்முறையும் வெற்றி வாகை சூடுவாரா?