முல்லைப்பெரியாறு விழாவில் கருணாநிதியை முன்வைத்து ஜெ. சொன்ன குட்டிக்கதை!
மதுரை: முல்லைப்பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வெற்றிக்கு காரணமான முதல்வர் ஜெயல்லிதாவிற்கு மதுரையில் விவசாயிகள் மாபெரும் விழா ஒன்றை நடத்தினர்.
விழாவில் பேசிய ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழகத்துக்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ஒரு குட்டிக் கதையாக, கூறினார்.
விடாமுயற்சியும் - உறுதியும்
ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோர அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சீடரைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடர், திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது என்றார்.
உறுதியாக நிற்கவேண்டும்
இதே கேள்வியை மற்றொரு சீடரிடம் கேட்டபோது, துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், கரையைப் போல உறுதியாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும் என்றார்.
அலைகளாய்... கரையாய்
இவற்றைக் கேட்ட குரு, சில நேரங்களில் அலைகளாய் இரு, சில நேரங்களில் கரையாய் இரு என்று சொன்னார்.
வெற்றிக்கு காரணம்
இந்த கதையில் வருவதைப் போல, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எனது தலைமையிலான அரசு அலைகளாகவும், கரையாகவும் இருந்து செயல்பட்டதால் தான் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்தது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
கருணாநிதிக்கு ஒரு கதை
வாழ்வளித்தவர்களை அழிக்க நினைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி எனக் குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதை ஒரு கதையின் மூலம் விளக்கினார்.
கடவுள் கொடுத்த வரம்
ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
செல்வம் கேட்ட ஏழை
அதற்கு, பணம், செல்வம், தங்கம், வைரம் என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை. உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது. ஆனால், ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.
என்னதான் வேண்டும்
கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. இருப்பினும், அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை. உடனே கடவுள், இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும் என்று கேட்டார்.
விரல் வேண்டும் கடவுளே
அதற்கு அந்த ஏழை, எனக்கு அந்த விரல் வேண்டும் என்றார். இதைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்து விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.