234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்.. காமராஜர் சாதனையை சமன் செய்வாரா ஜெயலலிதா?
சென்னை: தமிழகத்தில், 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் 234 தொகுதிகளையும் சந்திக்கப்போகும் கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்டுள்ள அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அதன்பிறகு அதிமுக தற்போது உதிரி கட்சிகளை தனது சின்னமான இரட்டை இலையில் போட்டியிட செய்து, தேர்தலை சந்திக்கிறது.
இதன் மூலம், 234 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது அதிமுக. கட்சி மிகவும் பலமாக உள்ளதாக ஜெயலலிதா கருதுவதே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தன்னம்பிக்கை
கடந்த லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு, 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தைரியம் தற்போது கூடுதலாகியுள்ளது. ஜெயலலிதாவின் துணிச்சலை அதிகரிக்கும் வகையில், தற்போது, தமிழகத்தில் ஐந்து முனை போட்டிஏற்பட்டுள்ளது. அதனால், அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி, சாதகமான சூழல் ஏற்படும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.
காமராஜர் காலம்
1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 206 தொகுதிகளில், 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது. 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 46 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வெற்றி பெற்றது.
கூட்டணி கலாசாரம்
அதன்பின், நடந்த எல்லா சட்டசபை தேர்தல்களிலும் ஏதாவது ஒன்று அல்லது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுத்தான், திமுக மற்றும் அதிமுகவின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இரட்டை இலை
எனவேதான், தமிழகத்தில் வேறு எந்த கட்சியும், செய்யாத சாதனையாக, தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் முடிவில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக தெரிகிறது. லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளை அதிமுக பெற்றுள்ளதால் ஜெயலலிதா இம்முறை 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளாராம்.
காமராஜர் சாதனை
அதிமுக இத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்த கட்சி என்ற பெருமை ஜெயலலிதா தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு வந்து சேரும்.