லோக்சபா தேர்தல்: அதிமுக- இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி- ஜெ. அறிவிப்பு! கூட்டணி முழக்கம் வெளியீடு!!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியின் முழக்கத்தையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர்களான பரதன், சுதகார் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என இன்றைய கூட்டணியில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் போயஸ் தோட்டம் சென்றனர்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பரதன், தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதிமுக- இ.கம்யூ கூட்டணி - ஜெ.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது என்றார்.
இதுதான் கூட்டணி முழக்கம்
மேலும் அமைதி, வளம், முன்னேற்றம் என்பதுதான் அதிமுக கூட்டணியின் முழக்கங்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நாளை பிரகாஷ் காரத் சந்திப்பு
முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் நாளை சந்தித்து பேசுகிறார்.
நாளை மார்க்சிஸ்ட் கூட்டணி அறிவிப்பு
நாளை சந்திப்பின் முடிவில் மார்க்சிஸ்ட் கட்சியுடனான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.