ஜெ. ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை
சென்னை: பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கிடைக்க வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதே வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஜெயலலிதா மனு விசாரணைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மனுக்களின் வரிசைப் பட்டியலில், ஜெயலலிதாவின் மனு 65-வதாக இடம்பெற்றுள்ளது. எனவே, பிற்பகலில் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
108 பால்குடம்
சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 108 பால்குடம் எடுத்து அதிமுகவினர் வழிபட்டனர்.
கோவில்களில் வழிபாடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டி மோவூர் டெல்லி அம்மன் கோயிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, பூண்டி ஒன்றிய அதிமுகவினர் போந்தவாக்கம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம் சார்பில் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனைகளும், சிறப்பு அபிஷேகமும் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை பெற வேண்டி, பூண்டி ஒன்றிய அதிமுகவினர் போந்தவாக்கம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
வீடுகளில் விளக்கு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக வென்ற ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி கூட்டு பிராத்தனை செய்தனர். வழக்கில் இருந்து விடுபட்டு வந்து மீண்டும் முதல்வராக வேண்டும் என்று ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டனர்.
தங்கத்தேர் இழுத்து
கோவை சாய்பாபா கோவிலில் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை
திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 100008 வடைமாலை சாற்றி அதிமுகவினர் வழிபட்டனர்
குத்துவிளக்கு பூஜை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை,பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர்.
சத்ரு சம்ஹாரயாகம்
அதிமுகவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டி 108 மூலிகைகளைக் கொண்டு சத்ரு சம்ஹாரா யாகம் நடைபெற்றது. திருச்சி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை
கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருச்சியில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆசியர்கள் சங்கம் சார்பில் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பள்ளிவாசலில் தொழுகை
நெல்லையில் கேடிசி பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் அதிமுகவினர் மெழுகுவற்றி ஏற்றி வழிபாடு நடத்தினர்.