தமிழக மக்களுக்கு மத்திய அரசு இழைத்த 15 துரோகங்கள்... பட்டியலிட்ட ஜெயலலிதா
திருப்பூர்: தமிழகத்துக்கு மத்திய அரசு 15 துரோகங்களை இழைத்ததாக தனது திருப்பூர் பிரச்சாரக் கூட்டதில் குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
அதன்படி, நேற்று திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் தமிழகத்துக்கு மத்திய அரசு இழைத்த துரோகங்கள் என 15ஐ பட்டியலிட்டார். அவையாவன :-
இலங்கைத் தமிழர்கள் அழிய காரணம்...
மாநில அரசு மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணத்துக்கு அண்டை மாநில நதி நீர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது.
முதல் துரோகம்...
இதனை தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா?நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மாறாக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர்கள் அழிய காரணமாக இருந்தது காங்கிரஸ் அரசு. இது முதல் துரோகம்.
தமிழக மீனவர் பிரச்சினை...
இலங்கை அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொண்டது 2-வது துரோகம். தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது 3-வது துரோகம்.
கச்சத்தீவு பிரச்சினை...
கச்சத் தீவு பிரச்சினையில் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இது 4-வது துரோகம். தமிழகத்துக்கு மண்ணெண்ணையை குறைத்தது மத்திய அரசின் 5-வது துரோகம்.
மின்சாரம் மறுக்கிறது மத்திய அரசு...
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுதேர்வை மத்திய அரசு நுழைத்தது 6-வது துரோகம். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க மறுப்பது காங்கிரஸ் கூட்டணி அரசின் 7-வது துரோகம்.
காவிரி மேலாண்மை பிரச்சினை....
தமிழக கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பது மத்திய அரசின் 8-வது துரோகம். காவிரி மேலாண்மை அமைக்காதது மத்திய அரசின் 9-வது துரோகம்.
சேவை வரி துரோகம்...
மாதந்தோறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பது காங்கிரஸ் கூட்டணி அரசின் 10-வது துரோகம். சேவை வரியை அறிமுகப்படுத்துவது மத்திய அரசின் 11-வது துரோகம்.
12வது, 13வது துரோகம்....
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது மத்திய அரசின் 12-வது துரோகம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைய வழி வகுத்தது காங்கிரஸ் கூட்டணி அரசின் 13-வது துரோகம்.
14வது மற்றும் 15வது துரோகம்...
மானிய விலை கியாஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை குறைத்தது மத்திய அரசின் 14-வது துரோகம். விவசாய பயிர்களுக்கான காப்பீட்டு பிரிமியத்தை உயர்த்தியது மத்திய அரசின் 15-வது துரோகம்.
உங்கள் பொன்னான ஓட்டு...
இந்த தேர்தலில் பல கட்சிகள் களம் இறங்கி இருக்கின்றன.வேறு கட்சிக்கு ஆகப்போவது எதுவும் இல்லை. எனவே உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவு அளித்தால் மத்தியில் வலிமையான ஆட்சி அமையும்' என இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.