கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தை தமிழக மீனவர் அனுமதியின்றி இடிப்பதா? இலங்கைக்கு ஜெ. கண்டனம்
சென்னை: சர்ச்சைக்குரிய கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தை தமிழக மீனவர்கள் அனுமதியின்றி இலங்கை அரசு இடிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயம் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. 2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இருநாட்டு மீனவர்களும் ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை ஒன்றாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயத்தை இடித்து விட்டு புதிய ஆலயம் கட்டுவதற்கான பணிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை புதிய கடற்படை முகாம் அமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழக மீனவர்களை கலந்து ஆலோசிக்காமல் அந்தோணியார் ஆலயத்தை இலங்கை அரசு இடிக்க முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.