பர்கூர்... பெயரைக் கேட்டாலே ஜெயலலிதாவுக்கு சும்மா அதிருதுல்ல... கலாய்க்கும் கேப்டன்!
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பர்கூர் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் இந்த பர்கூர்தான் அவருக்கு வெற்றியையும் தோல்வியையும் கொடுத்த ஊர். அதனால்தான் இந்த ஊர் பக்கம் வர அவர் பயப்படுகிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அதிமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா. அப்போது அவர், "கடந்த காலங்களில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் , தேமுதிக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளில் பணியாற்றிவந்த 91,308 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளதாக" தெரிவித்தார்.
ஆனால், இதனை வழக்கம்போல் தனது பாணியில் கலாய்த்துள்ளார் விஜயகாந்த். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தேமுதிக நிர்வாகி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
தேமுதிகவை அழிக்க முடியாது...
அப்போது அவர் பேசுகையில், "தேமுதிக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பல மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஆனாலும், பல்வேறு சோதனைகளைக் கடந்து தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிக இயங்கி வருகிறது. தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.
பயம் அறியாதவர்கள்...
அரசு தரப்பில் எத்தனை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள். ஏனெனில் தேமுதிகவினர் பயம் அறியாதவர்கள். பயம் இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் இருக்காது.
பர்கூர் பயம்...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பர்கூர் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. எங்கெங்கோ செல்கிறவர், இங்கு மட்டும் ஏன் வருவதில்லை? ஏனெனில் இந்த பர்கூர்தான் அவருக்கு வெற்றியையும் தோல்வியையும் கொடுத்த ஊர். அதனால்தான் இந்த ஊர் பக்கம் வர அவர் பயப்படுகிறார்.
பண ஆசை...
அதிமுகவில் பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறி, 91 ஆயிரம் பேர் இணைந்ததாக கூறுகின்றனர். இணைந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு அக்கட்சிக்கு சென்றவர்கள். விட்டால், ஒட்டு மொத்த தமிழகமும் கட்சியில் இணைத்து விட்டதாக கூறுவர்" என்றார்.