முதுகில் கட்டியுடன் அவதிப்படும் சிறுவன் தனுஷ்: சென்னையில் மருத்துவ சிகிச்சைக்கு ஜெ., உத்தரவு
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்திகிரி தரப்பு, குருபட்டி கிராமத்தைச் சேர்ந்த பவளக்கொடி என்பவரின் மகன் சிறுவன் தனுஷ் முதுகுப் பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள கட்டியால் அவதிப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, சிறுவன் தனுஷுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சிறுவன் தனுஷை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பிறவியில் ஏற்பட்டுள்ள "Congenital Melanocytic Hemangioma" நோய் என்றும், இதற்கு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் சிறந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தனர்.
பவளக்கொடியின் ஏழ்மையான சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஜெயலலிதா, சிறுவன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள நோயினை குணப்படுத்துவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளார்.
சிறுவன் தனுஷ் மற்றும் அவரது தாயாரை சென்னைக்கு அழைத்து வந்து, சிறுவன் தனுஷுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் அளித்திடவும், சிகிச்சை முடியும் வரை அரசு செலவில் சிறுவன் தனுஷும், தாயார் பவளக்கொடியும் சென்னையில் பாதுகாப்பாக தங்க ஏற்பாடுகள் செய்யும்படியும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.