வெளிநாடா? கொடநாடா? சிகிச்சைக்கு எங்கு செல்கிறார் ஜெ?
சென்னை: உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா ஓய்விற்காக கொடநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது, ஆனால் ஜெயலலிதா சிறப்பு சிகிச்சைக்காக சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்ல உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ஆலந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘அம்மா தயவு செய்து ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக் கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, 2014 அக்டோபர் 18ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் தீராத மனவேதனைதான் அவரது உடல் நலனை மேலும் மோசமடையச் செய்துவிட்டதாம். அதுவே அவரை முடக்கிப்போட்டு விட்டதாம்.
கடந்த மே 11ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததால், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். தமிழக முதல்வராக மே 23ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழா வழக்கம் போல இல்லாமல் சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது இதற்குக் காரணம் அவரது உடல்நல பாதிப்புதான் என்று பேசப்பட்டது.
ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்பதுதான் இப்போதைய பெரிய தொந்தரவு. கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. சிகிச்சை எடுத்தும், பயிற்சிகளை செய்தும் வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான்போகிறதாம். அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுகிறாராம்.
முதல்வர் பணி
முதல்வராக பதவியேற்ற பின்னர் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரும் ஜெயலலிதா சில மணிநேரங்கள் மட்டுமே பணிகளை முடித்து விட்டு சென்றுவிடுகிறாராம். இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுக்க காரணம் சென்னையை தாண்டிய வேறு ஊருக்கு பிரச்சாரத்திற்கு செல்ல முடியாது என்பதால்தான் என்றும் பேசப்பட்டது.
வீடியோ கான்பரன்சிங்
மெட்ரோ ரயில் சேவையை கூட தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதேபோல அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.
இஃப்தார் விருந்து
ஜெயலலிதாவின் உரையை ஓ.பன்னீர்செல்வம்தான் வாசித்தார். அதில், 'கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை என்று தனது உடல்நலம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
கொடநாடு பயணம்
ஆண்டுதோறும் கொடநாடு சென்று ஓய்வெடுப்பார் ஜெயலலிதா.எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின்னர் கொடநாடு செல்வதாக திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, மூட்டு வலி அதிகமானதாலேயே இந்த ஆண்டு தனது கொடநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
வெளிநாடு பயணம்
இந்நிலையில், சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அநேகமாக சிங்கப்பூர் அல்லது அமெரிக்கவுக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக ஜெயலலிதா தனது மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இன்னும் சில தினங்களில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்டும் ஜென்மகுரு
ஜெயலலிதாவிற்கு தற்போது குரு பெயர்ச்சியும் சரியில்லாத நிலையில் உள்ளது. ஜென்மத்தில் குரு அமர்ந்திருப்பதால் உடல் நலக்குறைவும் அதனால் கவலைகளும் வாட்டி எடுக்கும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதற்கான பரிகார பூஜைகளும் ஒரு பக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன்
மிக நீண்ட தூரப் பயணங்கள், அது ஹெலிகாப்டர் பயணமாக இருந்தாலும் ஜெயலலிதாவினால் செல்ல முடியாது என்றும், மேடையில் நின்று 10 நிமிடங்களுக்குள்தான் அவரால் பேச முடியும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் ஜெயலலிதா. சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய ஜெயலலிதாவாக திரும்ப வரவேண்டும் என்பதே அதிமுகவினரின் வேண்டுதலாகும்.