ஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் ஜே.கே. ரித்தீஷ்!
சென்னை: சென்னையில் ஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நடிகர் ஜே.கே. ரித்தீஷை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன் நடிகர் ரித்தீஷ். ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அதிமுகவில் இணைந்தார். நடிகர் சங்கத் தேர்தலின்போது இவர்தான் பல காரியங்களுக்குப் பின்புலமாக இருந்ததாக கூறப்பட்டது. நாசர் - விஷால் அணிக்கு முழு பலமாக திகழ்ந்தார்.
மேலும், திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்காக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தனது சென்னை வீட்டிலிருந்து ஜிம்முக்குப் போயுள்ளார். அப்போது அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரித்தீஷை, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான மணிகண்டன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.