கோஷ்டிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. எடப்பாடி கோஷ்டி மீது கே.பி.முனுசாமி கடும் பாய்ச்சல்!
எடப்பாடி அணியினர் மீது முன்னாள் அமைச்சர் முனுசாமி சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதால் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவே தெரிகிறது.
சென்னை : அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், எடப்பாடி அணியினர் மீது முன்னாள் அமைச்சர் முனுசாமி சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதால் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவே தெரிகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்ததிலிருந்து எடப்பாடி அணியினர் அவர்களின் கோபத்தை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அஷ்டமி, நவமி போய் இன்று ரகசிய இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. எனினும் எடப்பாடி அணியிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.
இயற்கையானது அல்ல
பன்னீர் செல்வத்தின் வீட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். எனவே அவர்களின் சந்தேகத்தை போக்க பன்னீர் செல்வம் கோரியது போல் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சசிகலா குடும்பத்தினர் ஒருவர் விடாமல் அனைவரையும் கட்சியிலிருந்து துரத்த வேண்டும்.
அழைப்பு வரவில்லை
இந்நிலையில் அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் எடப்பாடி அணி சார்பில் குழுவினர் ஏற்படுத்தப்படவில்லை என்று ஒரு அமைச்சரும், 7 பேர் கொண்ட குழு வைத்திலிங்கம் தலைமையில் ஏற்படுத்தியாகிவிட்டது என்று மற்றொருவரும் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாறி மாறி பேசுவதை பார்த்தால் இவர்களுக்கு பின்னால் யாரோ இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அழைப்பு விடுத்த அவர்கள், அதற்கான சூழலை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.
குழப்பமான நிலை
யாரோ சொல்லிக் கொடுப்பதை கேட்டு வந்து பேசுகிறார்கள். ஒரு பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தினால்தான் தார்மீக நிலைப்பாடு ஏற்படும். ஆனால் இங்கு ஆள் ஆளாக்கு ஒன்று பேசுகிறார்கள். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளை தவிர வேறு ஏதும் இல்லை என்றார் அவர்.
இணைவதில் சிக்கல்?
டெல்லி சென்றுள்ள முதல்வர் வந்தவுடன் இன்று ரகசிய இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான தாமதமான சூழல் நிலவுவதையும், எடப்பாடி அணியினர் மீது ஓபிஎஸ் அணியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் பார்க்கும்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதிலும் அதிமுக இணைவிலு்ம சிக்கல் எழுந்துள்ளதாகவே கருதப்படுகிறது.