கிரிக்கெட்: தேர்வு செய்யப்படுவோரில் அநேகர் பூணூல் திருமேனிகளான உயர் ஜாதியினர் தான்- வீரமணி
சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் ஒழிய அந்த விளையாட்டையே தடுக்க வேண்டும். இத்தடுப்புப் பல வகைகளில் நாட்டின் ஆரோக்கியத்தை வளர்க்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், "நம் நாட்டில் இன்று விளையாட்டில் அதிகம் விளம்பரம் பெறுவதும், செல்வாக்குள்ள விளையாட்டாக மட்டுமல்லாமல், நல்ல "தொழில்" ஆகவும் பயன்படுத்துவதாகும். இங்கிலாந்து நாட்டில், வெயிலில் காய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. 11 பேர் ஆடும் கிரிக்கெட் விளையாட்டு என்ற மட்டைப் பந்து விளையாட்டும் அப்படித்தான்.
அந்த நாட்டில் பிறந்து, உலக அறிவாளிகளில் ஒருவராக ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கிய மேதை, ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்களே கிரிக்கெட் பற்றி விமர்சிக்கையில், "11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டு" என்று கூறினார்..
இன்றைக்கு அந்த எண்ணிக்கையானது நேரிடையாகப் பார்ப்பவர்களைவிட வானொலி, தொலைக்காட்சி சாதன வசதிகள் காரணமாக பல லட்சக்கணக்கில் - கோடிக்கணக்கில் பார்க்கும் மயக்கப் பரவசம் ஏற்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுக்கும் நமது தட்பவெப்பத்திற்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது. அதனால் கிராமத்து வயல்வெளிகளில்கூட, பள்ளிப் பிள்ளைகள் நடுப்பகலில் கொளுத்தும் வெயிலில்கூட விளையாடும் கொடுமை கண்கூடு.
இது விளையாட்டு என்ற தன்மையிலிருந்து மாறுபட்டு, பணம் கொட்டும் தொழிலாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது இன்று.
அதனால்தான் மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் இதனை வைத்து, மற்ற தொழில்களில் சம்பாதிப்பதைவிட கோடி கோடியாக எளிதில் பணம் சம்பாதித்து கொள்ளை லாபக் குபேரர்களாகி உள்ளனர்.
அதனால்தான் போட்டி மேல் போட்டி. இந்த கிரிக்கெட் அமைப்பில் பொறுப்புகளைப் பெற ஏராளமான பணத்தை இறைக்கும் நிலை.
இது ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் இதில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படுவோரில் அநேகர் பூணூல் திருமேனிகளான உயர் ஜாதியினர் தான். அண்மையில் ஒரு திரைப்படத்தில்கூட இந்த மன உளைச்சல் காட்டப்பட்டுள்ளது.
முதுகைத் தடவிப் பார்த்து இந்த விளையாட்டில் எனக்கு வாய்ப்பிருக்காது என்பது போன்ற வசனமும், காட்சியும் யதார்த்த உண்மைகளின் படப்பிடிப்பாகும்.
"ரங்காச்சாரிகளுக்கும், சுனில் கவாஸ்கர்களுக்கும், கங்குலிகளுக்கும், டெண்டுல்கர்களுக்கும்தான்" மேலான வாய்ப்பு, விளம்பரங்கள். சூத்திர பஞ்சமர்களுக்கு அங்கே திறமை இருந்தாலும் அதிக வாய்ப்புத் தரப்படாத நிலைதான்.
எனவே, இந்த கிரிக்கெட் தொழிலில் ஒருபுறம் வர்க்கம் - மேல் வர்க்கம். மறுபுறம் வருணம் - மேல் வருணத்தவர் ஊடகங்கள் எல்லாம் இவர்கள் இருவரின் கையடக்கம்தானே.
எனவே, இதில் விளையாடத்தான் ஐ.பி.எல். என்று புதிய தொடர் ஒன்றைப் புகுத்தி, விளையாடுபவர்களையே "விலைக்கு வாங்கி" வைத்துக் கொண்டு, கம்பெனிகளாக்கி போட்டி விளையாட்டு ஒருவகை.
அதை வைத்து சூதாட்டம் பலகோடிக்கணக்கில் - இதில் ஹவாலா, கருப்புப்பணம் எல்லாம் இருக்கும் தானே. அதை ஊதி வெடித்துக் கிளம்பியதன் விளைவு இதில் பல பார்ப்பன முதலாளிகள் சிக்கியுள்ளனர்.
அவர்கள் ருசிகண்ட பூனைகள். மீண்டும் உறியை நோக்கி தாவுவது போல் தாவிக் கொண்டுள்ளனர்.
எவ்வளவு தான் ஊழல் மலையாகத் தெரிந்தாலும், அதனைக் கடுகாக்கி மறைத்து விடும் "வித்தைகளை" நன்றாக அறிந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக்கூட புறந்தள்ளி, தாங்கள் ஏதோ மிஸ்டர் கிளீன்களாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளுகின்றனர். இந்த சூதாட்டத்தைக் கண்டும் காணாது, நேரிடையாக இல்லாத மாதிரிக் காட்டிக் கொண்ட இதன் பொறுப்பாளர்களான பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள்.
இதுபற்றி மிகக் கடுமையான கண்டனத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜஸ்டிஸ் தாக்கூர், ஜஸ்டிஸ் இப்ராகிம் கலிஃபுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் கொலைக்குச் சமம் என்று மிக அருமையாகக் கூறியுள்ளனர்.
இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் ஒழிய அதனையே முழுமையாக தடுக்க வேண்டும். இது பல வகையில் நாட்டின் ஆரோக்கியத்தை வளர்க்கும்.
பெருக்கி சுத்தமாக்குதல் இதிலிருந்து முதலில் தொடங்க வேண்டும் - தெருக்களிலிருந்து அல்ல அதைச் செய்ய நமது தோழர்கள் உள்ளனரே. பிறவி "சூத்திரர்களும், பஞ்சமர்களும்" என்பது தானே மனுதர்மம்" என்று தெரிவித்துள்ளார்.