கபாலி டிக்கெட் விலை விவகாரம்: சென்னையில் விற்பனை வரி அதிகாரிகள் ஆய்வு
சென்னை: கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரினை அடுத்து சென்னையில் 18 தியேட்டர்களில் விற்பனை வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இதனையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திரையரங்குகளுக்கு முன் மேளம் கொட்டி நடனமாடி திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மனிக்கு ரீலிஸ் ஆனது. இதனைகாண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். இதனிடையே காசி தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சிலருக்கு டிக்கெட் கிடைக்காததால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதே போல் பேனர் ஒன்று சரிந்து ஆட்டோ மீது விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சென்னையில் பல தியேட்டர்களில் கபாலி படத்தின் டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டதாக கூறி பிளாக்கில் ரூ.2000க்கு விற்பனை செய்வதாக சர்ச்சை எழுந்தது.
கபாலி திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்ட், அதற்கு அரசின் 30 சதவீதம் வரிவிலக்கும் அளித்துள்ளது.
சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் திரைப்படங்களுக்கு அரசு அளிக்கும் 30 சதவீத வரி விலக்கின் பயன் படம் பார்க்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.
அரசின் வரி விலக்கை பெற்றுள்ளது கபாலி திரைப்படம். ஆனால் அதன் பயனை பொதுமக்களுக்கு அளிக்காமல் தனது வாயில் மட்டும் போட்டுக்கொள்கிறார் அதன் தயாரிப்பாளர் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
வரி விலக்கின் பயனையும் மக்களுக்கு அளிக்காமல், ரூ.120க்கான டிக்கெட்டை ரூ.2000க்கு விற்பனை செய்யுமாறு வற்புறுத்துவது எவ்வளவு மோசமான செயல் என்றும் தியேட்டர் வாசலில் காத்திருந்த ரசிகர்கள் விமர்சித்தனர்.
பல இடங்களிலும் கபாலி டிக்கெட் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் உள்ள அபிராமி, ஆல்பர்ட், ஈகா, தேவி, ஏஜிஎஸ் உள்ளிட்ட 18 தியேட்டர்களில் இன்று காலை முதலே விற்பனை வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
படம் பார்க்க வந்துள்ள ரசிகர்களிடம் டிக்கெட்டுகளை வாங்கி சோதனை செய்த அதிகாரிகள், ரசிகர்களிடமும் டிக்கெட் விலை பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தனர். தியேட்டர்களில் விற்பனை வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications