கலாம் நினைவு நாளை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை
சென்னை: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த நாளை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியர்களின் ஊக்க சக்தியாக விளங்கிய மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம், கடந்த 27ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார். நேற்று அவரது உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. இந்த சோகத்தில் இருந்து இந்தியா இன்னமும் விடுபடவில்லை.
கலாம் பிறந்தநாள் இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கலாம் மறைந்த தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் மற்றும் தலைவர் பெரியசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியா வல்லரசாக வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் போன்ற கருத்துக்களை கலாம் வலியுறுத்தி வந்தார்.
அவரது கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் வகையில் அப்துல்கலாம் மறைந்த ஜூலை 27-ந் தேதியை மதுவிலக்கு நாளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.