பெற்றோர்களிடம் பாலியல் புகார்... மாணவிகளை மிரட்ட முயற்சித்த எஸ்விஎஸ் கல்லூரி... ஷாக் தகவல்
விழுப்புரம்: பிரச்சினையில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில் மாணவிகளை மிரட்ட, அவர்களது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் போன் செய்து சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது பாலியல் புகார் கூறியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் இயங்கி வருகிறது எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரிக்கு எதிரே தனியார் நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாணவிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்கள் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அக்கல்லூரியின் தாளாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அக்கல்லூரி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்றவற்றிற்கு உரிய ரசீதுகள் கொடுக்கப்படவில்லை. நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பாக எதிர்த்துக் கேட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கடுமையாக மிரட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து, ‘உங்கள் மகளுக்கு தவறான பழக்க வழக்கங்கள் உள்ளன. ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறார். பாலியல் ரீதியாக அவளுடைய நடவடிக்கை சரியில்லை' என அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளன.
நடத்தை குறித்து இப்படிப்பட்ட புகார்களைக் கூறினால் தான் சம்பந்தப்பட்ட மாணவிகள் பயப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் நினைத்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு பயந்து நடந்து கொண்டோம் என அக்கல்லூரி மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை தற்கொலை செய்து கொண்ட மாணவிகளும் தங்களது கடிதத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், ‘நாங்கள் தற்கொலை செய்ததற்கு கேரக்டர் சரியில்லாததுதான் காரணம் என கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சொல்வார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்' என அம்மாணவிகள் தங்களது கடைசிக் கடிதத்தில் எழுதியுள்ளது நினைவு கூரத்தக்கது.