சாதி மறுப்பு திருமணங்களுக்கு தடை ஏற்படுத்தும் சுற்றறிக்கை... அரசுக்கு கனிமொழி கேள்வி!
திருமண பதிவிற்கு பெற்றோரின் அடையாள அட்டைகளும் அவசியம் என்ற அரசு சுற்றறிக்கைக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருமண பதிவிற்கு பெற்றோரின் அடையாள அட்டைகளும் அவசியம் என்று அரசு கொடுத்திருக்கும் சுற்றறிக்கை சாதி மறுப்பு திருமணங்களுக்கு பெருமளவில் தடையை ஏற்படுத்தும் என்று திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமணப் பதிவை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பதிவுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் மற்றும் சாட்சிகளின் ஆவணங்களோடு இனி பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து கொள்வோருக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்வோர் எப்படி அவர்களின் சான்றிதழ்களைக் கொண்டு வர முடியும் என்பது தான் கேள்வி.
இந்நிலையில் அரசின் இந்த சுற்றறிக்கைக்கு திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். முகநூலில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், தமிழ்நாட்டில் இனி காதலிப்பர்வள் தங்களின் பெற்றோரின் அனுமதியுடன் தான் காதலிக்க வேண்டும்.
புரட்சித் திருமணங்கள் தடுக்கப்படும்
பெற்றோர் ஒப்புதல் இன்றி இனி தன் வாழ்க்கை துணையை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனால் சாதி மறுப்பு, மதமற்ற, ஏற்ற தாழ்வுகள் அற்ற புரட்சி திருமணங்கள் எல்லாம் பெருமளவில் தடுக்கப்படும்.
பதிவுத்துறை சுற்றறிக்கை
செப்டம்பர் 25,2017ல் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் ஒரு தன்னக சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இனி திருமண பதிவுகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணின் அடையாள சான்றிதழ்கள் மட்டும் அளித்தால் போதாது.
பெற்றோர் சான்றிதழை எப்படி தர முடியும்
திருமணம் செய்துகொள்வோரின் பெற்றோர்கிளின் அடையாள சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் இருவர் எப்படி பெற்றோர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற அத்தாட்சிகளை தர முடியும்.
மறைமுக கணை
இந்த அறிக்கை மறைமுகமாக சாதி மறுப்பை, மத மறுப்பை எதிர்ப்பதற்கான ஒரு மறைமுக கணையாகத் தான் தெரிகிறது. நாம் மெதுவாக மதவாதிகளின், சாதியவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறோமா?
அரசியல் சட்டத்திற்கு எதிரானது
பல நூற்றாண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுகிறோமா? தன் பெயரில் திராவிடத்தைத் தாங்கும் ஆளம் கட்சி இதை ஏன் தடுக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை இது என்றும் கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.