நான் நன்றாகத்தானே இருக்கிறேன்.. எதற்கு எனக்கு முன் சங்கு? சிஎம் கான்வாயை புறக்கணித்த கர்ம வீரர்!
நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர்.
சென்னை: நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையின் சிகரமாய் வாழ்ந்தார்.
தமிழ்த்தாயின் தங்கமகனாக கருதப்பட்டவர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர். தனது வாழ்நாளில் 55 ஆண்டுகளை பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்.
எளிமை மற்றும் நேர்மையின் அடையாளமாய் வாழ்ந்த அவரின் 115வது பிறந்த நாள் இன்று. இந்நன்னாளில் கர்ம வீரரின் எளிமையை வெளிப்படுத்திய ஒர் சம்பவம்..

சைரன் சத்தத்துடன்..
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றப் பிறகு தனது காரில் ஒரு பயணத்துக்காக கொன்றுக்கொண்டிருந்தாராம். அப்போது நடைமுறைப்படி முதல்வருக்கான கான்வாய் வாகனங்களும் சைரன் சத்தத்துடன் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்தன.

எனக்கு முன்பு ஏன் சங்கு?
இதனைக் கவனித்த பெருந்தலைவர், தனது காரின் உள்ளே இருந்த உதவியாளரிடம் முன்னே செல்லும் சைரன் கார்களை நிறுத்துமாறு கூறியுள்ளார். கார் நிறுத்தப்பட்டவுடன் அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து, நான் நன்றாகத்தானே இருக்கிறேன், எதற்கு எனக்கு முன்பு சங்கு ஊதிக்கொண்டு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறை..
முதல்வரின் இந்த கேள்வியை சற்றும் எதிர்ப்பாராத அதிகாரிகள் தங்களின் பாதுகாப்புக்காக நடைமுறைப்படி தான் செல்கிறோம் என கூறியுள்ளனர். உடனே குறுக்கிட்ட கர்மவீரர், தான்தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எந்த பாதுகாப்பும் தேவையில்லை
அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி அவர்கள் அச்சுறுத்தல் கொடுப்பார்கள். எந்த பாதுகாப்பும் தேவையில்லை. உதவிக்கு மட்டும் ஒரு கார் வரட்டும். மற்ற கார்கள் புறப்படலாம் என கூறியுள்ளார்.

வேறு என்ன இருக்க முடியும்?
இதனை எப்படி ஏற்பது என விழித்த அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை பெருந்தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதற்கான டீசல், சம்பளம் என பல வகைகளில் அரசுக்கு ஏற்படும் செலவு குறையும் எனக்கூறி கான்வாயை தவிர்த்துவிட்டாராம் பெருந்தலைவர் காமராஜர். அவரது எளிமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்..?












Click it and Unblock the Notifications