ஈழத் தமிழர் பிரச்சனைக்காக அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்: கருணாநிதி
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளயெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாழ்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட அந்தப் பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்தக் குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்களோ, அந்தக் குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றவகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும்.
நம்முடைய தமிழ் இனத்திலே ஒரு பகுதி இலங்கையிலே வாழகின்ற பகுதியிலே உள்ளவர்கள் எந்த அளவுக்கு இன்றையதினம் அடிமைகளாய், தொழும்பர்களாய் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் பெருமூச்சு
விடிவு காலமே தெரியாதா, தமிழனாகப் பிறந்தால், அதுவும் இலங்கையிலே பிறந்தால், இலங்கைத் தமிழன் என்ற நிலையிலே வாழ வேண்டிய அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டால், அவன் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத்தேரைகளாய் வாழ வேண்டுமா என்ற அந்தக் கேள்விக்கு எப்பொழுதுதான் நாம் விடை காணப்போகிறோம் என்று விட்ட பெரு மூச்சினுடைய அடையாளம்தான் இன்று நடைபெறுகின்ற இந்த அணிவகுப்பு.
படை வல்லமை
அணிவகுப்பு என்பதால், நாம் படை கொண்டு இலங்கைக்குச் செல்லப்போகிறோம் என்பதல்ல. ஆனால் படை கொண்டு காட்டுகின்ற வல்லமையை விட அதிக வல்லமை நம்முடைய இயக்கங்களுக்கு உண்டு. நம்முடைய பேச்சுக்கு உண்டு.
தொடர்ந்து போராட வேண்டும்
நம்முடைய செயலுக்கு உண்டு. நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.
மக்கள் கிளர்ச்சி
ஒரு போராட்டத்திலே தான் மக்கள் திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர்களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காது களிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும் என்ற அந்த அளவிலே தான் நாம் தொடர்ந்து என்னதான் அடக்குமுறைகளுக்கு ஆளானாலும், சித்திரவதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூடிநநிலை உருவானாலும், அவைகளை யெல்லாம்சாதாரணமாக மதித்து தமிழன் வாழ வேண்டும், அவனை வாழவைக்க வேண்டும்.
சூளுரை
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்தச் சூளுரையை ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் இன்றையதினம் இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே இன்றைக்கு மாத்திரமல்ல, தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும்.
கேளாக்காதினர்...
அப்படி நடைபெற்றால்தான் அது கேளாக்காதினருடைய காதுகளைத்திறக்கும் என்பதற்காகத்தான் நாம் இன்றையதினம் இந்த முழக்கத்தை தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலே நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சே வழி அது..
இந்த முழக்கம் கேட்டு ராஜபக்சேயின் செவிப்பறைகள் கிழியட்டும் என்பதல்ல; ராஜபக்சேவை நாம் அமைதியான முறையிலே தான், அறவழியிலேதான் கேட்கிறோம். அவர் வழியிலே அல்ல. ராஜபசேயின் வழி வன்முறை வழி. பலாத்கார வழி. படுகொலை வழி. தமிழர்களுடைய பிணங்களைக் காணுகின்ற வழி.
இது பெரியார் அண்ணா வழி
அந்த வழியை நாம் மேற்கொள்ளாமல் அறவழியில், அண்ணா வழியில், அய்யா வழியில், தமிழர்களுடைய நெறிப்படி ஏற்றுக்கொண்ட அந்த வழியில் சந்திக்கின்றோம்.
அனைவரும் சேர்ந்து போராடினால்..
அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை இந்தியாவிற்கு மாத்திர மல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்நவைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம்.
இவ்வாறு கருணாநிதி உரையாற்றினார்.