எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கருணாநிதி முடிவு?
சென்னை: இம்முறை கருணாநிதி சட்டசபைக்கு செல்வார் என்று திமுக வட்டாரங்களில் தகவல் கசிகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டசபைக்கு செல்வதில்லை என்பதை ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஏதோ கொள்கை முடிவு போல பின்பற்றி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, பதிலடியாக சட்டசபைக்குள் நுழைந்து, அரசை எதிர்த்து சரமாரியாக பேசினார் ஜெயலலிதா.
இதுபோல அரிதான நிகழ்வுகள்தான் உண்டே தவிர, வழக்கமாக சட்டசபை செல்வதில்லை. இந்த லிஸ்டில் பிற்காலத்தில் விஜயகாந்த்தும் சேர்ந்து கொண்டார். கடந்த பல கூட்டத்தொடர்களை அவர் புறக்கணித்தார்.
இந்நிலையில், தமிழத்திலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் தன்னை வெற்றிபெற வைத்த திருவாரூர் தொகுதி மக்களுக்காகவும், தற்போது மிகவும் பலமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் காரணத்தினாலும், இம்முறை சட்டசபைக்கு கருணாநிதி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே கேலி, கிண்டல் செய்தாலும், பதிலடி கொடுக்க எம்.எல்.ஏக்கள் பலம் இருப்பதால் கருணாநிதி களம் காணுவார் என கூறப்படுகிறது. மேலும், இதுதான் தனது கடைசி தேர்தல் என்று கருணாநிதி பிரசாரம் செய்துள்ள நிலையில், சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பை அவர் தவற விடமாட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.