சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. சொன்ன பொய்கள்... ஆதாரத்துடன் நிரூபித்த குன்ஹா: கருணாநிதி
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதம் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்ட ஜெயலலிதா, கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப் பட்ட தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி, ‘ஒய்யார கொண்டையாம் தாழம்பூ' என்ற தலைப்பில் 4வது நாளாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சாட்சிகள் மூலம்...
வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்த போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அவற்றை மேற்பார்வையிட்டது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள் மூலம் நிரூபணம்...
அதேபோல், திருமண செலவுகளுக்கு தம் முடைய பெயரில் ஜெயலலிதா கொடுத்த காசோலைகளையும் பட்டியலிட்டுள்ள அவர் வங்கியிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் அவை நிரூபிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்தாக்கல்...
மேலும், சுதாகரன் திருமணம் குறித்து ஜெயலலிதா நேரில் சாட்சி சொன்ன போது தாம் எதுவும் செலவழிக்கவில்லை என்று கூறிய போதும் 1996 மற்றும் 1997 &ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ரூ.31 லட்சம் செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார்.
விளம்பர செலவு...
ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டில் கைப்பற்றபட்ட ஆவணங்களின் படி சுதாகரனின் திருமணத்திற்கு பத்திரிக்கைகள் மற்றும் விளம்பர செலவுகளுக்கு ரூ-.12.50 லட்சம் செலவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எதற்காக காசோலைகள்...
திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால் பந்தல், விளக்கு அலங்காரங்கள், கார்கள், அழைப்பிதழ்கள், செலவுகளுக்கு ஜெயலலிதாவே கையெழுத்து போட்டு காசோலைகளை கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை என்று தீர்ப்பில் நீதிபதி குன்ஹா தெரிவித்திருப்பதை இந்த அறிக்கையில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரூபணம்...
இவற்றின் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.