பற்றாக்குறை என்னும் நோயால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: "பற்றாக்குறை" என்னும் நோயால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசின் கட்டண விகிதங்கள் அதிகமாகி, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் விண்ணளவுக்கு உயர்ந்து விட்டன என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் நிதி நிலையோ திவால் திசையை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது! ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலச் சாதனை இதுதானா?
மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டை யொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடை பெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சி நடைபெற்றதா?
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இவ்வாறு தள்ளி வைக்கப்படக் கூடக் காரணம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கிற போது இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மாநாடு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. அதை உண்மை என்று நிரூபிப்பதைப் போல முதலமைச்சராக ஜெயலலிதா வந்த பிறகுதான் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
ஆனால் அந்த மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவாறு இரண்டு இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் வந்தனவா? இல்லை என்பதுதான் வேதனையான பதில்!
அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே சிக்க வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு ஒரு நீண்ட கட்டுரையை, வரைபடத்தோடு வெளியிட்டிருந்தது.
தி.மு.க ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும், நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது.
ஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு வருவாய்ப் பற்றாக்குறையோ, நிதிப் பற்றாக்குறையோ தி.மு. கழக ஆட்சியில் இருந்ததைவிடக் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை யில், 2015-2016ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை 4,616.02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை 31,829.19 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. கழக ஆட்சியோடு ஒப்பிடும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறை 1,219.57 கோடி ரூபாயும், நிதிப் பற்றாக்குறை 15,607.06 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை பெருகி விட்டது. வருவாய்ப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகமாகி "பற்றாக்குறை" என்னும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டது தமிழகம். அரசின் கட்டண விகிதங்கள் அதிகமாகி, அத்தியா வசியப் பொருள்களின் விலைகளும் விண்ணளவுக்கு உயர்ந்து விட்டன. இயற்கையால் பெய்த பெருமழையோடு, செயற்கையான வெள்ளமும் இணைந்து மக்களின் வாழ்க்கையைத் தலைகீழா கப் புரட்டிப் போட்டு விட்டது. ஏழையெளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடியல் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.