கொடைக்கானல் பாதரசக் கழிவு விவகாரம்: தொழிலாளர்களுக்கு இழப்பீடு தர யுனிலீவர் நிறுவனம் சம்மதம்
கொடைக்கானல்: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொடைக்கானல் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி, நீதிமன்ற உத்தரவுப்படி தனது முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை தர சம்மதம் தெரிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகரில் 1984 இல் அமைக்கப்பட்டது இந்துஸ்தான் யூனிலீவர் தெர்மா மீட்டர் தொழிற்சாலை நிறுவனம். இந்த நிறுவனத்தால் இங்குள்ள ஏரிகள், சுற்றுச் சூழல் நச்சுமயமாகத் தொடங்கியது.
இதையடுத்து இந்தக் கம்பெனியானது கடந்த 2001ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையால் மூடப்பட்டபோதிலும், இங்கு கொட்டப்பட்ட தெர்மா மீட்டர் பாதரசக் கழிவுகளில் 290 டன் கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை யூனிலீவர் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவ்விதம் அகற்றப்படவில்லை.
ஆலையின் பின்னால் இருந்த சோலைக் காட்டில் இந்தப் பாதரசக் கழிவுகள் கொட்டப்பட்டன. இந்தக் கழிவுகளால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, குழந்தைப்பேறு இல்லாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இறந்து விட்டனர்.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. ஆனால், இதுவரை தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என அதன் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட அந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்ற உத்தரவை ஏற்று சம்மதம் தெரிவித்துள்ளது இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி.
இதன்படி, சுமார் 1000 கோடி ரூபாய் அதன் முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீடாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.