கூத்தநல்லூரை தனி தாலுகாவாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளூர் மக்கள் நன்றி
சென்னை: கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தமிழக அமைச்சர் காமராஜூக்கும், எம்.எல்.ஏ தமிமூன் அன்சாரிக்கும், அனைத்து சேவை அமைப்புகளும், ஜமாத்தார்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மக்களின் வசதிக்காகவும் எளிதாக அணுகவும் புதிதாக ஐந்து வட்டங்களை (தாலுகா) உருவாக்க தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார். ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கூத்தாநல்லூர், கயத்தார், சிங்கம்புணரி ஆகிய ஐந்து புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மக்களை நாடி, எனது அரசு என்பது அதிமுக அரசின் கொள்கையாகும். வருவாய்த்துறையின் சேவைகள் மக்களுக்கு அதிவிரைவாக கிடைத்திடும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்பது புதிய கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தைப் பிரித்து ஆண்டிமடம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சீரமைத்து கயத்தார், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைப் பிரித்து சிங்கம்புணரி ஆகிய இடங்களில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். இதற்காக ரூ.4 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் வருவாய்த்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் கிடைக்க வழி ஏற்படும்' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கூத்தநல்லுரை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அந்த ஊர் ஜமாத்தார்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை நாகப்பட்டிணம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடமும் கோரிக்கையாக வைத்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூர் தாலுகா அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த ஊர் ஜமாத்தார்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அமைச்சர் காமராஜூக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.