கோவை விஸ்வநாதனுக்கு ஒரு "குடோஸ்".. ஹெல்மெட்டை வைத்து ஒரு சத்தமில்லா சாதனை
கோவை: தமிழகத்தில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என்கின்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த ஹெல்மெட்டிலேயே சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த ஒருவர்.
கோவை சிங்கா நல்லூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். ஹிந்து பிரஸ்ஸில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர்தான் ஹெல்மெட்டில் புதுமையான ஒரு விஷயத்தினை விழிப்புணர்வு அடிப்படையில் மக்களுக்காக புகுத்தியுள்ளார்.
ஹெல்மெட் அணியவே முடியாது என்று அடம் பிடிக்காமல், ஹெல்மெட் போட்டும் உயிரிழப்பு ஏற்படுகிறதே என்று விதண்டாவாதம் பேசாமல் தன்னுடைய ஹெல்மெட்டின் பின்பக்கம் பெயர், ரத்தப் பிரிவு, ஏதேனும் அவசரமென்றால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ஆகியவற்றை எழுதியுள்ளார் இவர்.
இவருடைய ஹெல்மெட் புகைப்படமும், அதில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளும் பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகின்றது. இது குறித்து அவரிடம் "ஒன்இந்தியா - தமிழ்" செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஹெல்மெட் அணியவே தயங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை உண்டாக்கவே இந்த பதிவினை இட்டுள்ளேன். இதை அனைவரும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் பூப்போட்டஹெல்மெட், பயங்கரமான படம் போட்ட ஹெல்மெட் ஆகியவற்றினை வாங்குவதற்கு பதிலாக உங்களை உண்மையிலேயே உயிர் காக்கும் இது போன்ற விவரங்கள் அடங்கிய வாசகங்களை எழுதி ஹெல்மெட்டினை வாங்குங்கள்... விபத்தில்லாமல் வாழுங்கள்...விழிப்புணர்வு விஸ்வநாதனுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!