கோவன் கைது: முதலில் எதிர்ப்பு.. பின்னர் ஆதரவு.. பாஜக தமிழிசை அடித்த பலே பல்டி!
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கோவன் கைது செய்யப்பட்டது நியாயமற்ற செயல் என்று முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தற்போது அவரது கைது சரியானதுதான் என்று பல்டி அடித்துள்ளார்.
கோவன் கைது குறித்து முன்னதாக அவர் தெரிவித்த கருத்தின்போது பாடல் பாடியதற்காக கைது செய்வது சரியல்ல என்று கூறியிருந்தார். கைதையும் கண்டித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் அதை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'' கோவன் பாடிய முதல் பாடலில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஆட்சேபகரமாக கருத்து எதுவும் இல்லை. டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதற்காக ஏன் கைது செய்ய வேண்டும்? டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வது, எல்லோருடைய கருத்தோடு ஒத்த கருத்துத்தானே!. அதனால் இதற்காக கைது அவசியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.

ஆனால் அவர் பாடிய மற்றொரு பாடலை கேட்டேன். அதில் முதல்வரையும் பிரதமரையும் கொச்சைப்படுத்தி கேட்கத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடுவதை கருத்தாக முன் வைக்காமல், தலைவர்களை கொச்சைப் படுத்தும் வகையில் பாடப்பட்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
கருத்து சுதந்திரம் யாரை யும் புண்படுத்ததாக வகையில் கண்ணியமாக இருக்க வேண்டும். கருத்து சுதந்திரமாக இருந்தாலும் அது ஒரு வரையறைக்குள் தான் இருக்க வேண்டும், யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்து விமர்சனங்கள் மரியாதையுடன் முன் வைக்கப்பட வேண்டும்.
முதல் பாடலை கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ளும் என்னால், இரண்டாவது பாடலை அப்படி பார்க்க முடியவில்லை. இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதை கோவன் போன்றவர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தலைவர்கள் இரண்டாவது பாடலை கேட்க நேர்ந்தால், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.அவரது விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளதாகவே நான் கருதுகிறேன் '' என தெரிவித்துள்ளார்.
கில்லி பட விஜய் வசனம் போல!
கில்லி படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். முதலில் தனது அம்மாவுக்கு ஆதரவாக பேசுவார். பின்னர் திடீரென தனது அப்பாவுக்கு ஆதரவாகப் பேசுவார். கேட்டால் அதில் திருவள்ளுவர் அப்படிச் சொல்லியிருந்தார். இதில் இப்படிச் சொல்லியிருந்தார் என்று தநது பல்டிக்கு சாதகமாக இலக்கியத்தை துணைக்கு அழைத்துப் பேசுவார். தமிழிசை அறிக்கையும் அந்தப் பாடல் சரிதான். ஆனால் இந்தப் பாடல் சரியல்ல என்று கூறி பல்டி அடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications