தங்கள் பகுதிக்கு வராததால் மினி பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள் - கோவில்பட்டியில் பரபரப்பு!
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வராததை கண்டித்து, பொதுமக்கள் இரண்டு மினி பஸ்களைச் சிறை பிடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ் சேவை நடைபெற்று வருகிறது. இதில் மந்திதோப்பு பகுதிக்கு இரண்டு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காமராஜர் தெரு, அண்ணா தெரசா நகர், உள்பட பல்வேறு வழியாக மந்திதோப்பு கிராமத்துக்கு செல்லும். அந்த வகையில் வழித்தடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு பஸ்களும் கணேஷ் நகர், துளசிங்கநகருக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு மினி பஸ்களையும் எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கும், மாணவர்கள் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் சுமார் 150 பேர் கோவில்பட்டியில் இருந்து மந்திதோப்புக்கு சென்ற இரண்டு மினி பஸ்களையும் சிறை பிடித்தனர். எங்கள் பகுதிக்கு வந்து சென்றால்தான் மினி பஸ்களை விடுவிப்போம் என்று டிரைவர்களிடம் வாக்குவாதத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மினி பஸ் உரிமையாளரிடம் பேசி குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.