கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்.. ஒரு வாரத்தில் மின் உற்பத்தி
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அதன் இயக்குனர் ஜின்னா தெரிவித்தார்.
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அதன் இயக்குனர் ஜின்னா கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அணு உலையில் கடந்த 2013ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கியது.
இந்த அணு உலையில் கடந்த 2014ம் ஆண்டு 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் இந்த அணு உலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து இரண்டாவது அணு உலையிலும் பணிகள் விரைவுப்படுதப்பட்டு கடந்தாண்டு ஆக 23ம் தேதி மின் உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த ஜூன் 31ம் தேதி இரண்டாவது அணு உலையில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இதனிடையே முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஏப்ரல் 13ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அணு உலையில் மொத்தம் 163 எரிகோல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் 3ல் ஒரு பங்கு யுரேனியம் எரிகோல்கள் பொருத்தும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதனால் முதல் அணு உலையில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் வளாக இயக்குநர் ஜின்னா கூறுகையில், "முதல் அணு உலையில் மின் உற்பத்திக்கான, முந்தைய சோதனை நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும்" என்று தெரிவித்தார். கூடங்குளம் முதல் அணு உலையில் 4 மாதங்களாக மின் உற்பத்தி தடைப்பட்டிருந்தது. எனினும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்ததால் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.