டெஸ்ட் டியூப் கருத்தரிப்பில் விபரீதம்.... உயிரிழந்த பெண், சிசுக்கள் கணவரிடம் ஒப்படைப்பு
செயற்கை முறையில் கருத்தரித்து பிரசவ வலி ஏற்பட்டு சிசேரியன் ஆபரேஷனின் போது மாரடைப்பில் உயிரிழந்த தாய், அவரது இரு சிசுக்களின் உடல்களை கணவர் வீட்டாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி: டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பிறந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண் மற்றும் அவரது இரு சிசுக்களின் உடல்களை கணவர் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை முத்தரையர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). பொறியியல் பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.
மருத்துவர்களிடம் பரிசோதனை செய்ததில் இயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. எனவே டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.
கருக்கள் உருவாக்கம்
விக்னேஷின் சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திவ்யா கர்ப்பமானார். 2 கருக்கள் உருவாகி இருந்தன. பின்னர் அவர் புதுவைக்கு அழைத்து வரப்பட்டார். திவ்யா புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்தார். அவருக்கு கடந்த 23-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. எனவே காமராஜர் சாலையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர்.
வேறு மருத்துவமனைக்கு...
அவர்கள் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறி இசிஆர் சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது திவ்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தைகளும் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
யாரிடம் உடல்கள்
தகவலறிந்த திவ்யாவின் உறவினர்களும், முத்திரையர்பாளையம் பகுதி மக்களும் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, திவ்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், திவ்யா மற்றும் 2 குழந்தைகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணவரும் வலியுறுத்தல்
திவ்யா மற்றும் குழந்தைகளின் உடல்களை தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது கணவரும், அவர் தரப்பினரும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் நீதிமன்றத்தின் கணவர் தரப்பினார் உதவியை நாடினர். இதனால் திவ்யாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதில் தடை இருந்தது. அவர்களது உடல்கள் ஜிப்மர் மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டது.
கணவரிடம் ஒப்படைக்க உத்தரவு
இது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலனை செய்து திவ்யா மற்றும் 2 குழந்தைகளின் உடலை கணவர் விக்னேஷிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது. இதனை அடுத்து போலீஸார் நேற்று காலை திவ்யா மற்றும் 2 குழந்தைகளின் உடலை, பிரேத பரிசோதனை செய்து அவரது கணவர் விக்னேஷிடம் ஒப்படைத்தனர்.